மூன்றாம் நாளாக ராமேஸ்வரத்தில் சூறாவளி தொடரும் 3ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் மூன்றாவது நாளாக சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து பாம்பனில் 3ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவக்காற்று சீசன் துவங்கியதால் மே 24 முதல் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் தனுஷ்கோடியில் கடலில் ராட்சத அலைகள் எழுந்து தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பாராங்கற்கள் மீது ஆக்ரோஷமாக மோதி மேலே எழுந்தது. இதில் பாராங்கல்லில் உடைந்த சிறிய கற்கள் தேசிய நெடுஞ்சாலையில் பல இடத்தில் சிதறி கிடக்கிறது. இதனால் சுற்றுலா வாகனங்களில் டயர்கள் சேதமடைகிறது.தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பு, ஆர்ப்பரிக்கும் ராட்சத அலைகளை கண்டு சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர்.மேலும் பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் மூன்றாம் நாளாக தொடர்ந்து 3ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனால் மன்னார் வளைகுடா கடலில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.