சேதமடைந்த பாலத்தில் காத்திருக்கும் ஆபத்து
பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் அகற்றப்படாத சூழலில் ஆபத்து காத்திருக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமக்குடியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக அருகில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை பாலம் பயன்பட்டது. அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அவ்வப்போது சீரமைத்து போக்குவரத்திற்கு அனுமதித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலம் முற்றிலும் சேதமடைந்து பயன்பாட்டிற்கு தகுயின்றி உள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கின் போது அவ்வப்போது பாலத்தின் அருகில் குளிப்பவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போக்கில் அப்பகுதியை கடப்பதால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. மேலும் ஒவ்வொரு முறை ஆற்றில் தண்ணீர் வரும் போதும் நீரின் போக்கு ஒரே இடத்தில் செல்வதால் பல அடிக்கு பள்ளங்கள் உருவாகிறது. ஆகவே பாலத்தை அகற்றி தண்ணீர் சீராக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.