மது போதையில் காரை ஏற்றிய வழக்கில் பலி 2 ஆக உயர்வு
ராமநாதபுரம்:- ராமநாதபுரத்தில் மது போதையில் இளைஞர் 12 பேர் மீது காரை ஏற்றிய வழக்கில் மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.ராமநாதபுரம் தெற்கு தரவை அம்மன் கோயில் பகுதியில் மே 4ல் பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த மனோகரன் மகன் ராமநாதபிரபு , மாமனார் வீட்டுக்கு தெற்கு தரவை பகுதிக்கு வந்தார்.ராமநாதபிரபுவுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.மது போதையில் இருந்த ராமநாதபிரபு 12 பேர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சித்தார். இதில் காயமடைந்த சாத்தையா 55, பழனிக்குமார் 30, சிவா 35, மற்றும் முத்துக்குமார் 19, மேனாஜ் 24, ரித்திக்குமார் 19, தெய்வேந்திரசூரியா 25, பிரசாத் 23, ஆகியோர் மதுரை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். சம்பவத்தன்றே சாத்தையா பலியானார். கேணிக்கரை போலீசார் ராமநாதபிரபுவை கைது செய்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து பிரசாத் நேற்று பலியானார். இதனால் இவ்வழக்கில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.