அரசுடமையாக்கிய 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க முடிவு
ராமேஸ்வரம்:அரசுடைமையாக்கிய 74 தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. 2018--2020 வரை ராமேஸ்வரம் முதல் நாகை வரை மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் 74 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. 2022ல் இப்படகுகளை யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி நீதிமன்றங்கள் அரசுடைமையாக்கின. இப்படகுகள் இலங்கை கடற்கரையில் சேதமடைந்து கிடக்கும் நிலையில் யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை நடுக்கடலில் இப்படகுகளை மூழ்கடிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களின் வலைகள் மூழ்கடித்த படகுகளில் சிக்கி சேதமடையும் அபாயம் உள்ளது.ஏற்கனவே இதே போன்று மீனவர்வலைகளை சேதப்படுத்த, 2019ல் காங்கேசன்துறையில் இருந்து சேதமடைந்த 15 பஸ்களை நடுக்கடலில் போட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் இந்த முடிவை தடுத்து நிறுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.