தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
ராமேஸ்வரம்; தொடர் விடுமுறையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் (ஏப்.,12) முதல் ஏப்., 14 வரை தொடர் விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி முடித்து ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.அதிகளவு பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனையிலும் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இன்றி ரோட்டின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் ரோட்டில் வாகன போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.