நெல் கொள்முதல் மையத்தில் பதிவு விவசாயிகள் கடும் அலைகழிப்பு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் நெல் அறுவடை தாமதமாக துவங்கிய நிலையில் காப்பீடு பதிவு செய்ய பயன்படுத்திய மூவிதழ் அடங்கலை வைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைனில் பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால், மீண்டும் அடங்கல் சான்று பெற வி.ஏ.ஓ., தாசில்தார் அலுவலகத்திற்கு அலைய வேண்டியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:மழையால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால், காப்பீடு பதிவிற்கு பயன்படுத்திய மூவிதழ் அடங்கலை ஏற்க மறுக்கின்றனர்.மாறாக புதிதாக அடங்கல் சான்று வி.ஏ.ஓ., தாசில்தாரிடம் வாங்கி வரக் கூறுகின்றனர். அலைச்சலுக்கு பயந்து, நெல்லை சில விவசாயிகள் தனியாரிடம் விற்கும் நிலை உள்ளது. பலர் மீண்டும் அடங்கல் சான்று பெற வி.ஏ.ஓ., தாலுகா அலுவலகத்திற்கு அலைகின்றனர்.எனவே, நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி, உரிய ஆவணங்கள் உள்ள விவசாயிகளுக்கு உடனுக்குடன் வருவாய்த் துறையினர் அடங்கல் சான்று வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.நுகர்பொருள் வாணிப கழக பொதுமேலாளர் மெர்லின் டாரதி கூறியதாவது:மூவிதழ் சான்றிதழ் நகலை வைத்து ஆன்லைனில் பதிய முடியாது. புதிதாக வி.ஏ.ஓ., கையொப்பம் இட்ட அடங்கல் சான்றிதழ் கொண்டு வர கூறுகிறோம். விவசாயிகளை சிரமப்படுத்தும் நோக்கம் இல்லை. இந்த நடைமுறை எல்லா மாவட்டங்களிலும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.