சித்துார்வாடியில் வறட்சியால் கருகி வரும் நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தொடர் வறட்சியால் நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செப்., மாதத்தில் நெல் விதைப்பு செய்யப்பட்டது. விதைப்பு செய்யப்பட்ட பின் காலம் கடந்து பெய்த மழையால் கடந்த மாதம் நெற்பயிர்கள் முளைத்தன. நெற்பயிர்கள் முளைத்ததை தொடர்ந்து வயல்களின் நிலவிய ஈரப்பதத்தை பயன்படுத்தி விவசாயிகள் களை பறித்தல், களைக்கொல்லி மருந்து தெளித்தல், வயல் வரப்புகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சில பகுதிகளில் உரமிடும் பணியையும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இதனால் ஏக்கருக்கு சுமார் 15 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியால் வயல்களில் உள்ள நெற்பயிர்கள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வதங்கி வருகின்றன. குறிப்பாக சித்துார்வாடி, கோவிலேந்தல், வெட்டுக்குளம், அழியாதான் மொழி, நாகனேந்தல், சேந்தனேந்தல், காவனுார், ஊரணங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் வறட்சியால் கருகி வரும் பயிர்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.