கடலில் கலக்கும் கழிவுநீரால் மீன்கள் அழியும் அபாயம்
ராமேஸ்வரம்: மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து, 400க்கு மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். இவர்களின் வலையில் சிக்கும் விலையுயர்ந்த இறால், நண்டு உள்ளிட்ட பல வகை மீன்களை மண்டபம் வடக்கு கடலோரத்தில் உள்ள சில மீன் நிறுவன உரிமையாளர்கள் வாங்கி, சுத்தம் செய்து துாத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி கம்பெனிகளுக்கு அனுப்புகின்றனர். இந்நிலையில், மண்டபத்தில் உள்ள நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குழாய் மூலம் கடலில் கலக்கின்றனர். கடல் நீர் கருமை நிறமாக மாறி, பாசி படர்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலோரத்தில் வசிக்கும் சிறிய ரக மீன்கள் சுவாச பிரச்னையில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள், இதில் அலட்சியம் காட்டாமல், உரிய நடவடிக்கை எடுக்க, கடல்சார் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.