வாணியக்குடியில் பூக்குழி விழா
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடியில் முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு பூக்குழி விழா நடைபெற்றது. முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாரியம்மன் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறை வேற்றினர். தொடர்ந்து இளைஞர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது. மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.