ராமநாதபுரம் இருவழிச் சாலையில் அரசு பஸ்--கார் மோதல்: ஒருவர் பலி
பரமக்குடி: பரமக்குடி அருகே இரு வழிச்சாலையில் அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் பரமக்குடியைச் சேர்ந்தவர் பலியானார். பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகைதீன் 46. இவர் நேற்று காலை திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வழியாக பரமக்குடி நோக்கி காரில் வந்தார். காரை திருச்சியைச் சேர்ந்த டிரைவர் முத்துகிருஷ்ணன் ஓட்டினார். எதிரில் மதுரையில் இருந்து பரமக்குடி வழியாக ராமநாதபுரம் நோக்கி அரசு பஸ் வந்தது. பேரையூரைச் சேர்ந்த டிரைவர் சங்குமுத்து ஓட்டினார். காலை 9:30 மணிக்கு மழை பெய்த நிலையில் பரமக்குடி அருகே சத்திரக்குடி கீழக்கோட்டை கிராமம் இரு வழிச்சாலையில் அரசு பஸ்சும்- காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஷேக்முகைதீன் சம்பவ இடத்தில் பலியானார். பஸ் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் நின்றது. கார் டிரைவர் முத்துகிருஷ்ணன் உட்பட பஸ்சில் பயணம் செய்த 10 பேர் காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.