உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடியில் தயாராகும் கமகமக்கும் கருவாடுகள் வெளியூர் சந்தைகளுக்கு செல்கிறது

சாயல்குடியில் தயாராகும் கமகமக்கும் கருவாடுகள் வெளியூர் சந்தைகளுக்கு செல்கிறது

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி வி.வி.ஆர்., நகர் செல்லும் பகுதியில் ஏராளமான கருவாட்டு கம்பெனிகள் உள்ளன. இங்கு தயாராகும் கமகமக்கும் கருவாடுகள் வெளியூர் சந்தைகளுக்கும் செல்கிறது. மூக்கையூர், மாரியூர், வாலிநோக்கம், முந்தல், துாத்துக்குடி, பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை மொத்தமாக சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து இங்குள்ள கருவாடு உலர வைக்கும் கம்பெனிகளில் வழங்குகின்றனர்.கருவாடுகளுக்கு என உகந்த மீன்களாக சீலா, நெத்திலி, ஊழி, நகரை, பண்ணா முட்டி, சூடை, சாளை, கணவா, திருக்கை, வாலை, சூரை, காரா, முட்டை பாறை உள்ளிட்ட மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன.கருவாடுகளுக்காக பெரிய சிமென்ட் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு உப்புகளை கொட்டி அவற்றில் மீன்களை நிரப்பி இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு மிகாமல் ஊற விடுகின்றனர். பின்னர் அவற்றை தென்னை நார் விரிப்புகளால் ரகம் வாரியாக பிரித்து உலர வைக்கின்றனர். இரண்டு நாள் உலர வைத்த பின் கருவாடுகளாக சாயல்குடி, கடலாடி, முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடக்கும் வாரச்சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. கருவாடு மொத்த விற்பனையாளர் சாயல்குடியைச் சேர்ந்த அருள் பால்ராஜ் கூறியதாவது:கருவாட்டிற்கென பிரத்தியேகமாக பிடிபடும் மீன்களை உரிய முறையில் உலர வைத்து அவற்றை வெளியூர் சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறோம். கருவாட்டு வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். பொறிப்பதற்கும், குழம்பு வைப்பதற்கு சாயல்குடி கருவாடுகள் சுவை மிகுந்ததாக உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை