உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவ கிராமங்களில் வளங்கள் கண்டறிவதற்கு முயற்சி: டிஜிட்டல் முறையில் தயாரிக்கும் பணி தீவிரம்

மீனவ கிராமங்களில் வளங்கள் கண்டறிவதற்கு முயற்சி: டிஜிட்டல் முறையில் தயாரிக்கும் பணி தீவிரம்

நாட்டிலேயே குஜராத்துக்கு அடுத்தப்படியாக நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலம் தமிழகம். இங்குள்ள 608 மீனவர் கிராமங்களில் சுமார் 10 லட்சம் மீனவ மக்கள் வசிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 281.47 கி.மீ.,க்கு பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடற்கரை விரிந்து உள்ளது. இதனை நம்பி 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அதிலும் மீன்பிடித் தொழிலை நம்பி மட்டும் 1.50 லட்சம் மக்கள் உள்ளனர். தமிழகத்தின் மொத்த மீன் உற்பத்தியில் ராமநாதபுரம் மாவட்டம் 13.18 சதவீதம் கொண்டிருந்தாலும் பொருளாதார பட்டியலில் இன்னும் பின்தங்கியே உள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் இன்றும் பல மீனவ குடும்பங்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். பாக் ஜலசந்தி ஆழம் குறைவான பகுதியாக உள்ளதால் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மைக்கும் மக்கள் வாழ்வுக்கும் அடித்தளமாக உள்ளது. இந்நிலையில் மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக அவற்றின் வளம் குறித்த தரவுகளை திரட்டி, அதன் மூலம் வரைபடம் (மேப்) உருவாக்கும் பணியை உள்ளூர் இளைஞர்கள் மூலம் தக்ஷிண் அறக் கட்டளை செய்துவருகிறது. இது குறித்து அறக் கட்டளையை சேர்ந்த அந்தோணி முத்து கூறியதாவது: ராமநாதபுரம் மீனவர் கிராமங்களில் மீனவர் களுக்கான அரசின் திட்டங்கள் குறித்து ஆரம்பத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. அதன் அடுத்தகட்டமாக பாரம்பரியமாக மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர் கிராமங்களில் உள்ள வளங்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஓலைக்குடா, சேராங்கோட்டை, வடகாடு, சம்பை, மாங்காடு ஆகிய ஊர் மக்களை சந்தித்து அவர்கள் செய்து வரும் தொழில், அங்குள்ள வளங்கள் குறித்து ஆய்வு செய்து வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒடிசா, அந்தமான் பகுதிகளில் உள்ள மீனவ கிராமங்களில் இந்த முயற்சி வெற்றியடைந்து உள்ளது. அதை அடிப் படையாக கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் உள்ள தகவல் களை ஆவணப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள மீன், நண்டு, கடற்பாசி, பவளப்பாறை குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதனால் மீனவர்கள் தற்போது செய்து வரும் பாரம்பரிய மீன்பிடி முறை பாது காக்கப்படும். இவற்றை ஒருங்கிணைத்து அங்குள்ள உயிரினங்கள், மீனவர் தொழில் குறித்த தகவல்கள் வரைபடமாக உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக புவியியல் தகவல் முறைமை (ஜி.ஐ.எஸ்.,) மூலம் டிஜிட்டல் முறையில் வரைபடம் தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தும் போது மீனவர் களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை