கூட்டுறவு விழாவில் ரூ.10.20 கோடியில் 1137 பேருக்கு கடன் திட்ட உதவிகள்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 1137 பேருக்கு ரூ.10 கோடியே 20 லட்சத்தில் கடன் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.ராமநாதபுரம் தனியார் மகாலில் கூட்டுறவுத்துறை சார்பில் 71--வது கூட்டுறவு வார விழா நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் மக்களுக்கு கடன் திட்ட உதவிகளை வழங்கினார்.பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முன்னிலை வகித்தார். முன்னதாக கூட்டுறவு வார விழாவையொட்டி கொடியேற்றி உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.மகளிர்களுக்கு சுயஉதவிக்குழு, மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், வீடு கட்டுவோர், முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்ட உதவிகள் 1137 பேருக்கு ரூ.10 கோடியே 20 லட்சத்தில் வழங்கப்பட்டது.கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜுனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மனோகரன், ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் ரகுபதி, நகராட்சி தலைவர் கார்மேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.