அக்காவின் வாழ்க்கையை நாசமாக்கியவரை கூலிப்படையை ஏவி கொலை செய்தவர் கைது
திருவாடானை:தொண்டி அருகே நம்புதாளையில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். அக்காவின் வாழ்க்கை நாசமாக காரணமாக இருந்தவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக இந்த வழக்கில் கைதான வாலிபர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தியேட்டர் பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார் 29, சரவணன் 29. இருவரும் உறவினர்கள். முத்துக்குமார் திருவிழாக்களில் ராட்டினம் அமைக்கும் தொழில் செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை.நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு நம்புதாளையில் ராட்டினம் அமைத்திருந்த இடத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் சரவணன் உட்பட ஆறு பேர் கும்பல் கார் மற்றும் டூவீலர்களில் சென்று முத்துக்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். தடுக்க வந்த அவரது தாய் சுசீலாவை வெட்டியதில் அவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் நேற்று சரவணனை கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:எனக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். எனது அக்கா யசோதை 32. கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். யசோதையுடன் முத்துக்குமார் கடந்த ஏழு ஆண்டுகளாக கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தார். சில மாதங்களாக முத்துக்குமாரை விட்டு யசோதை பிரிந்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் அடிக்கடி அவரை சந்தித்து தொந்தரவு செய்தார்.இது குறித்து என்னிடம் கூறி வருத்தபட்டார். என் அக்காவின் வாழ்க்கை நாசமானதற்கு முத்துக்குமார் தான் காரணம். ஆகவே அவரை கொலை செய்யத் திட்டமிட்டேன். ஏற்கனவே என்னுடன் பழக்கமாக இருந்த கூலிப்படையை சேர்ந்த சிலரை வைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிவகங்கை ராஜா, திருவாடானை அஜித், பாலு, கடம்பாகுடி சொக்கு உள்ளிட்டோரை தொண்டி போலீசார் தேடி வருகின்றனர்.