உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கைக்கு கடத்த முயன்ற கொசு ஊதுபத்தி பறிமுதல்: இரண்டு பேர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற கொசு ஊதுபத்தி பறிமுதல்: இரண்டு பேர் கைது

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த கொசு விரட்டும் ஊதுபத்தி பார்சல்களை கியூ போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்டதாக இருவரை கைதும் செய்தனர். ராமேஸ்வரம் சேரன்கோட்டை கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமளிப்பதாக சென்ற வேனை சோதனையிட்டனர். அதில் 12 அட்டை பெட்டிகளில் 720 கொசு விரட்டும் ஊதுபத்தி பாக்கெட்டுகள் இருந்தன. இதனை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. கடத்தல்காரர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முனீஷ்குமார் 21, ஈஸ்வரமூர்த்தி 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வேன், ஊதுபத்திகள், கடத்தல்காரர்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடத்தல்காரர்கள் மீது சுங்கத்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மண்டபத்தில் ரூ.10 லட்சம்

கடல்அட்டைகள் பறிமுதல்

ராமேஸ்வரம் அருகே மண்டபம் தோணித்துறை கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையினர் ஒரு படகை சோதனையிட முயன்றனர். படகில் இருந்து இருவர் கடலில் குதித்து தப்பி ஓடினர். படகில் 1360 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். பறிமுதல் செய்த கடல் அட்டைகள், படகை மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை