ரோஜ்மாநகரில் பாதுகாப்பு தடுப்பு சுவர் நபார்டு வங்கி ரூ. 20 கோடி ஒதுக்கீடு
சாயல்குடி : சாயல்குடி அருகே ரோஜ்மா நகர் கடற்கரையில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க நபார்டு வங்கி ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரோஜ்மா நகர் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் பலத்த பேரலைகளின் தாக்கத்தால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் நிலவுகிறது. கடலோர கல்லறை தோட்டம் பகுதியில் பலத்த பேரலைகளின் தாக்கத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு பெரும் பகுதி பாதிக்கப்பட்டது.இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. ரோஜ்மா நகர் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும், கிராமத்திற்குள் கடல் நீர் புகாதவாறு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், மீனவர்களும் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.இதற்காக ரூ.20 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான நிதியை நபார்டு வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது.