அறிவியல் கண்டுபிடிப்புகளில் தேசிய, மாநில அளவில் பரிசு
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் தேசிய மற்றும் மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளனர்.பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 5 பேர் தேசிய பள்ளிகளுக்கு இடையிலான புத்தாக்க மாரத்தான் அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்றனர். இந்திய அளவில் 1000 பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.2023--24ம் கல்வியாண்டில் தேர்வு பெற்ற தமிழகத்தின் 110 பள்ளிகளில் பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.இவர்கள் ஷேர் ஆட்டோவில் விபத்து நடக்காத வகையில் தானியங்கி எச்சரிக்கை விளக்கு மற்றும் ஒலி எழுப்பும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.ஓவர் லோடு ஆகும் சூழலில் இக்கருவி எச்சரிக்கும். மாநிலத்தில் முதலிடம்
தமிழக அரசு பள்ளி கல்விதுறை 3 ஆண்டுகளாக பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு பள்ளியில் இருந்து 5 மாணவர் குழுவினர் அறிவியல் படைப்பாற்றலை சமர்ப்பிக்கின்றனர். இதன்படி கட்டுமான தொழிலாளர் செங்கற்களை எளிதாக எடுத்து செல்லும் சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.இதன் மூலம் தலை, கழுத்து வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றனர். 2023--24 கல்வியாண்டில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 பள்ளிகளில் சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியும் ஒன்றாகும். இவர்களுக்கு ரூ.1 லட்சம் தமிழக அரசு பரிசாக வழங்கி உள்ளது.மாணவர்களையும், தலைமையாசிரியர் நாகராஜன், வழிகாட்டிய ஆசிரியர்கள் நாகராஜன், சந்திரசேகரன் உள்ளிட்டோரை கல்வி குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் மனோகரன், தாளாளர் ரெங்கன், பொருளாளர் பரசுராமன் பாராட்டினர்.