வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை; விவசாயிகள் ஆர்வம்
ஆர்.எஸ்.மங்கலம், : வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் பருவமழை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்கள் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர்.திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களுக்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நெல் விதைப்பு செய்து 20 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. விவசாயிகள் விதைப்பு செய்தது முதல் தொடர்ந்து பருவமழையின்றி கடும் வறட்சி நிலவுவதால் நெல் விதைகள் முளைப்புத்திறனை இழக்கும் நிலையில் உள்ளது.இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்நிலையில், தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளதுடன், இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைப்பொழிவு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் வழக்கம் போல் வான் மேகத்தை பார்த்து காத்திருக்கின்றனர்.