இயற்கை முறை சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வளநாடு கிராமத்தில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் கேசவராமன் தலைமை வகித்தார். அப்போது உயிர்ம சாகுபடியில் கடைபிடிக்கப்படும் பல்வேறு இடுபொருட்கள், இயற்கை உரங்கள், தொழு உரங்கள், உயிர் உரங்கள் குறித்து களை மேலாண்மை, பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை குறித்து விளக்கினர். பின்னர் மீன் அமிலம் தயாரிப்பது குறித்து விவசாயி முத்துவிநாயகம் செயல்முறை விளக்கம் செய்து காட்டினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் ஜெயகண்ணன், ஒருங்கிணைப்பாளர் சத்தியபாமா செய்தனர். பயிற்சியில் வளநாடு, குமாரகுறிச்சி, கருமல் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.