உயர்நீதிமன்றம் தண்டனை விதிப்பு பீதியில் பாம்பன் மீனவர் தற்கொலை
ராமேஸ்வரம்:உயர்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததால் பீதியடைந்த பாம்பன் மீனவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கு பதிந்த நிலையில் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார் அளித்தார். ராமேஸ்வரம் அருகே பாம்பன் ஜெயில் தெருவை சேர்ந்தவர் பிச்சை 49. இதே தெருவில் 2011ல் இரு தரப்பு இடையே நடந்த மோதலில் சந்தியா ரெனி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டெனி, பிச்சை இருவரையும் போலீசார் சிறையில் அடைத்து 45 நாட்களுக்கு பின் ஜாமினில் வந்தனர். இதில் டெனி சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து 2022ல் பிச்சைக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிச்சை மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் ஆயுள் தண்டனையை ரத்து செய்து 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் பீதி அடைந்த மீனவர் பிச்சை நேற்று முன்தினம் இரவு மண்டபம் தோணித்துறை கடற்கரையில் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்த நிலையில் கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், முன் விரோதம் காரணமாக அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் எனவும் மனைவி மரிய பிரிங்கா மண்டபம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரிலும் போலீசார் விசாரிக்கின்றனர்.