பனைக்குளம் -ராமேஸ்வரம் ரோடு சேதம்; சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு
தேவிபட்டினம்: பனைக்குளம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் இவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் பாதிப்படைகின்றனர். திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை இரண்டும் தேவிபட்டினத்தில் ஒன்றாக இணைகின்றன. இதனால், தேவிபட்டினம் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது. இந்நிலையில், திருச்சி பகுதியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், கூடுதல் தொலைவை தவிர்க்கும் விதமாக ராமநாதபுரம் செல்லாமல் தேவிபட்டினம், கோப்பேரிமடம், பனைக்குளம் அழகன்குளம், நதிப்பாலம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரோட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பனைக்குளத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அதிவேகமாக செல்லும் வெளியூர் சுற்றுலா வாகனங்கள் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் ரோட்டில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.