பயணிகள் தவிப்பு: ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டில் பெயரளவில் வசதி
குறிப்பாக குடிநீர் வசதி பெயரளவில் உள்ளதால் பாட்டில் குடிநீரை விலைக்கு வாங்கி பயணிகள் சிரமப்படுகின்றனர். தற்போது கோடை காலத்தை கருத்தில் கொண்டு 24 மணி நேரம் சுத்தமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் 2023 ஆக., முதல் ரூ.20 கோடியில் விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதன் காரணமாக ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது.தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இட நெருக்கடியால் கடைகளும் பெயரளவில் மட்டுமே உள்ளன. குடிநீர், கழிப்பறை போதுமான அளவில் இல்லை. பஸ்கள் உள்ளே செல்லும் போதும், வெளிய வரும் போதும் ரயில்வே பீடர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் உட்புறத்தில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குடிநீர் வருவது இல்லை. பெயருக்கு உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கடைகளில் கூடுதல் விலைக்கு குடிநீர் பாட்டில்களை வாங்கி பயணிகள் சிரமப்படுகின்றனர்.தற்போது கோடை காலம் என்பதால் ஏழை பயணிகள் வசதிக்காக பஸ் ஸ்டாண்டில் காட்சிப்பொருளாக உள்ள தொட்டிகளில் தினமும் குடிநீர் நிரப்ப வேண்டும்.மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கூடுதலாக குடிநீர் தொட்டி வைத்து 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.