போதையில் பஸ் ஓட்டிய டிரைவர் நடுவழியில் நிறுத்திய பயணிகள்
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து சென்னை சென்ற ஸ்ரீ கிருஷ்ணா ஆம்னி பஸ்சை டிரைவர் மது போதையில் ஓட்டியதால் அச்சமுற்ற பயணிகள் கமுதி கோட்டைமேடு அருகே நடுவழியில் நிறுத்தினர்.சாயல்குடியில் இருந்து கமுதி வழியாக சென்னைக்கு தினமும் ஸ்ரீகிருஷ்ணா ஆம்னி பஸ் இயக்கப்படுகிறது. நேற்று இயக்கப்பட்ட பஸ்சில் டிரைவர் சுப்பையா மது போதையில் இருந்துள்ளார். பஸ்சை தாறுமாறாகஅவர் ஓட்டியதை கவனித்த பயணிகள் அச்சமடைந்தனர். இதில் ஒரு பயணிக்கு தலையில் காயமும் ஏற்பட்டது. இதையடுத்து கமுதி அருகே கோட்டைமேட்டில் பஸ்சை நிறுத்திய பயணிகள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டிரைவர் சுப்பையா போதையில் பதிலளித்துஉள்ளார். இதனால் பயணிகள் கமுதி போலீசில் புகார் அளித்தனர்.இதையறிந்த ஆம்னி பஸ் உரிமையாளர் மாற்று டிரைவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். அதையடுத்து மாற்று டிரைவர் அந்த பஸ்சை சென்னைக்கு ஓட்டிச் சென்றார். போதை டிரைவர் சுப்பையாவை கமுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.