ராமேஸ்வரத்தில் பேவர் பிளாக் ரோடு பணியில் குளறுபடி: மக்கள் எதிர்ப்பு
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணியில் குளறுபடி செய்ததால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ராமேஸ்வரம் நகராட்சியில் ஜல்லிமலை தெற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்கு ரோடு வசதி இல்லை. இதனால் இத்தெருவில் ரூ.51 லட்சத்தில் பேவர் பிளாக் ரோடு அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று சாலை அமைக்க தெருவின் முக்கிய சாலையில் இருந்து பக்கவாட்டில் வீடுகளுக்கு செல்லும் பாதையில் ஒப்பந்ததாரர் மணலை அள்ளி சமப்படுத்தி உள்ளார். இதனால் முக்கிய ரோடு, புதிய பேவர் பிளாக் ரோடு இடையே ஏற்ற இறக்கம் உள்ளதால் மழைக்காலத்தில் புதிய சாலையில் தண்ணீர் தேங்கும். இதனால் புதிய ரோடுசேதமாகும் அபாயம் உள்ளதாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ரோட்டை முறையாக அமைக்கக் கோரி பணியை தடுத்து நிறுத்தினர்.நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சிவா கூறுகையில், இத்தெருவில் உள்ள பிரதான சாலை மட்டத்திற்கு ஏற்ப புதிய ரோடு அமைக்க வேண்டும். மேலும் பக்கவாட்டில் அமையும் கான்கிரீட் தடுப்பு சுவரை 2 அடி உயர்த்த வேண்டும். அப்போது தான் புதிய ரோடு சேதமடையாமல் பல ஆண்டுகள் மக்கள் பயன்படுத்த முடியும் என்றார்.