இரண்டு ஆண்டுகளாக 100 நாள் வேலைத்திட்ட அட்டை தரவில்லை மக்கள் அலைக்கழிப்பு
கடலாடி:கடலாடி ஒன்றியத்திற்குஉட்பட்ட 60 கிராம ஊராட்சிகளிலும் கடந்த இரண்டு ஆண்டாக 100 நாள் வேலை திட்ட பணி செய்ய புதிய அட்டை வழங்கப்படாத நிலை தொடர்கிறது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடக்கிறது.கடந்த ஆண்டு ரூ.319க்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு நபருக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்பட்டது. தற்போது ரூ.336க்கு அரசு முழு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.பல கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு தற்போது ரூ.140 முதல் ரூ.180 வரை மட்டுமே அவர்களின் வங்கி கணக்கில் ஏற்றப்படுகிறது. புதிதாக நுாறு நாள் வேலைத்திட்ட பணியில் சேர்வோருக்கு புதிய அட்டையை கடந்த இரண்டு ஆண்டாக வழங்கவில்லை.ஆர்வம் உள்ள புதிய பணியாளர்கள் பணி செய்ய முடியாமல் தவிப்பில் உள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் அட்டைகளையும் புதுப்பித்து தராமல் உள்ளனர். இது குறித்து கடலாடி யூனியன் அலுவலகத்தில் கேட்டதற்கு சென்னையில் இருந்து இதற்கான நடைமுறை திட்டம் உள்ளது. ஆன்லைன் மூலம் இன் ஆக்டிவேட் செயல்பாட்டில் இல்லை என சொல்கின்றனர்.எனவே யூனியனுக்கு தொடர் அலைக்கழிப்பில் விபரம் கேட்பதற்காக பயனாளிகள் சென்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் புதியதாக அட்டை பதிவுபவர்களுக்கும் ஏற்கனவே அட்டை இருந்தும்புதுப்பித்து தராமல் உள்ள பயனாளிகளுக்கும் உரிய நடவடிக்கை எடுத்து பணி வழங்க வேண்டும் என்றனர்.