ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் மக்களுக்கு சிக்கல் கவர்னருக்கு மனு
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் மக்களின் பாரம்பரியமான தரிசன வழியை தடுத்ததற்கு தீர்வு காண கோரி தமிழக கவர்னர் ரவிக்கு ஹிந்து மக்கள் கட்சியினர் மனு அனுப்பினர்.ஹிந்து மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரபாகரன் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது :ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களை பொது மற்றும் கட்டண தரிசனம் வழியில் அனுமதிக்கின்றனர். இச்சூழலில் உள்ளூர் மக்கள் பாரம்பரியமாக அதுவும் சுபநிகழ்ச்சி நாட்களில் முக்கிய பிரமுகர்களுக்காக அமைத்த வழியில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோயில் அதிகாரிகள் இந்த வழியில் உள்ளூர் மக்கள் தரிசிக்க செல்லக்கூடாது. கட்டண வழியில் மட்டுமே செல்ல வேண்டும் என உள்ளூர் மக்களின் உரிமைகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இதனால் விசேஷ நாட்களில் குடும்பத்தினருடன் வரும் உள்ளூர் மக்கள் தரிசிக்க முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எங்களின் ஆன்மிக மரபுகள், உரிமைகளுக்கு ஏன் முட்டுக்கட்டை போடுகிறீர்கள் எனக் கேட்டால் எங்கள் மீது கோயில் நிர்வாகம் போலீசில் பொய் புகார் அளிக்கிறது. மேலும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காகவே கோயிலில் காசி விஸ்வநாதர் சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகளால் அடைத்துள்ளதால் பக்தர்கள் தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். கோயிலில் ஆன்மிக மரபுப்படி பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து நேற்று ராமேஸ்வரம் வந்த கவர்னர் ரவியிடம் பா.ஜ., நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.