அவதுாறு பரப்பும் கோயில் ஊழியர்கள் யாத்திரைப் பணியாளர்கள் புகார்
ராமேஸ்வரம்: - ராமேஸ்வரம் கோயில் யாத்திரை பணியாளர்களை அவதுாறாக பேசும், கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யாத்திரை பணியாளர் சங்கத்தினர் புகார் செய்தனர். இதுகுறித்து ராமேஸ்வரம் கோயில் யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகார் மனுவில் : கோயில் யாத்திரை பணியாளர் சங்க உறுப்பினர்களாக 425 பேர் பணிபுரிகின்றனர். நாங்கள் பல ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் வழங்கும் கட்டண டிக்கெட்டை பெற்றுக் கொண்டு பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றி, சுவாமி தரிசனம் செய்து வழிகாட்டுகிறோம். மனதிருப்தியுடன் புனித நீராடி, தரிசனம் செய்த பக்தர்கள், எங்களது சேவையை பாராட்டி விரும்பி கொடுக்கும் சன்மானத்தை பெற்றுக் கொண்டு எங்களது வாழ்வாதாரம் நடக்கிறது. இந்நிலையில் கோயில் ஊழியர்கள் சிலர் எங்களது சங்கத்தையும், உறுப்பினர்களையும் தரம் தாழ்த்தி பேசியும், எங்களுக்கு தொடர்பு இல்லாத சில பக்தர்களிடம் அவதுாறு பரப்புகின்றனர். எனவே எங்களது இறைப் பணியை பாதுகாத்து, எங்களை அவதுாறாக பேசும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.