விடுமுறையின்றி தொடர் பணியால் மன உளைச்சலில் தவிக்கும் போலீசார்
திருவாடானை; ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை இன்றி தொடர்ந்து பணியாற்றுவதால் மன அழுத்தம் அதிகரித்து போலீசார் தவிக் கின்றனர். தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் வார விடுமுறை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டள்ளது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு மேலாக போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு வார விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணியாற்றுவதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மாவட்டத்தில் சில போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பணியில் உள்ளவர்கள் கூடுதல் பணிச்சுமையால் தவிக்கின்றனர். அது தவிர ஜூலையில் இருந்து தொடர்ந்து கோயில் திருவிழாக்கள், பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு பணி என தொடர்ந்து பணிபுரியும் சூழல் உள்ளது. போலீசார் கூறுகையில், ஆடி மாதம் முதல் தொடர் திருவிழாக்கள் நடக்கிறது. மேலும் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள், கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் குருபூஜை நடைபெற இருப்பதால் இப்போதே தொடர் பணிகள் உள்ளது. இதனால் பல போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசாருக்கு வார விடுமுறை என்பது கானல் நீராகிவிட்டது. வரும் நாட்களிலும் பாதுகாப்பு பணிக்காக வெவ்வேறு மாவட்டங் களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பணிச் சுமை அதிகமாகும். இதனால் பலருக்கும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும் குறைந்து விட்டது. குறைந்த பட்சம் வார விடுமுறை அல்லது மாதம் இரு நாட்கள் விடுமுறை வழங்கினால் நல்லது என்றனர்.