கடலில் மிதந்த மூடை மாயம் தேடும் பணியில் போலீசார்
தொண்டி;திருப்பாலைக்குடி அருகே கடலில் மிதந்த சாக்கு மூடை குறித்து போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே மோர்பண்ணையில் இருந்து மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்கச் சென்றனர். கடலில் 8 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு பெரிய சாக்கு மூடை மிதந்ததை பார்த்தனர். அதை மீட்க அச்சமடைந்த மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். தேவிபட்டினம் மற்றும் தொண்டி மரைன் போலீசார் தேவிபட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம், நம்புதாளை உள்ளிட்ட கடல் பகுதியில் படகில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கஞ்சா கடத்தி சென்ற போது படகிலிருந்து மூடை தவறி விழுந்திருக்கலாம் அல்லது வேறு ஏதாவது பொருளாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. தற்போது பலத்த காற்று வீசுவதால் ஏதாவது கடற்கரை பகுதியில் அந்த மூடை ஒதுங்கலாம் என்பதால் அதைப்பார்த்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு வலியுறுத்தி உள்ளனர்.