டாக்டர் நியமிக்க டிச.30ல் காத்திருப்பு போராட்டம்
தொண்டி : தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கக் கோரி டிச.30 ல் மக்கள் நல பணிக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து மக்கள் நலப் பணிக்குழுவினர் கூறியதாவது: தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். ஒரு டாக்டரால் சிகிச்சை அளிக்க முடியவில்லை. நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதால் சோர்வடைகின்றனர்.கூடுதல் டாக்டர் நியமிக்கக் கோரி அதிகாரிகளை சந்தித்து பலமுறை வலியுறுத்தியும் பயனில்லை. ஆகவே டிச.30 ல் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.