ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜன.17 வரை சிறை
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேருக்கு ஜன.17 வரை சிறைக்காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.டிச. 23ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் அந்தோணி ஆரோன், பூண்டிராஜ் ஆகியோரது இரு விசைப்படகை சிறைப்பிடித்து, 17 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் இலங்கை கடற்படையினர் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று முன்தினம் மன்னார் நீதிமன்றத்தில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு ஜன., 17 வரை சிறைக்காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் மீனவர்களை மீண்டும் சிறையில் அடைத்தனர். மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் சிறைகாவல் நீட்டிப்பு தகவலால் மீனவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.