குறைந்த சம்பளம் கொடுத்ததால் தண்டவாளத்தில் கிளிப் அகற்றம்; வடமாநில வாலிபர்கள் கைது
மானாமதுரை: குறைவான சம்பளம் கொடுத்ததால் மானாமதுரை ரயில்வே தண்டவாளத்தில் இருந்த 420 கிளிப்களை அகற்றிய 2 வட மாநில ஒப்பந்த தொழிலாளர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் சூடியூர்--பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கிடையே செப்.16ல் ரயில்வே தண்டவாளத்தில் இருந்த 420க்கும் கிளிப்கள் அகற்றப்பட்டிருந்தன. உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரயில்வே கிளிப் அகற்றியவர்களை தேடி வந்தனர்.நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மற்றும் மானாமதுரை பகுதிகளில் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 4 பேரை பிடித்து விசாரித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்24, நித்தேஷ் 21, இருவரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இவர்களை வேலைக்கு அழைத்து வந்த ஏஜன்ட்கள் ரயில்வேயிடம் கூடுதலான சம்பளத்தை வாங்கிக் கொண்டு இவர்களுக்கு குறைந்த சம்பளத்தையே கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த இருவரும் தண்டவாள கிளிப்களை அகற்றியுள்ளனர் என்றனர்.