கீழக்கரையில் சேதமடைந்த மீன் மார்க்கெட் அகற்றம்
கீழக்கரை : கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பின்புறம், சேதமடைந்துள்ள பழைய மீன் மார்க்கெட் அகற்றும் பணி நடக்கிறது.கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்ட் மற்றும் மீன் மார்க்கெட் கடைகள் கடந்த 1995ல் பேரூராட்சியாக இருக்கும்பொழுது கட்டப்பட்டதாகும். பராமரிப்பு இன்றி அடிக்கடி சேதமடைந்தும் சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்தது. இதனால் கடை வியாபாரிகளும், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.இதையடுத்து பழைய மீன் மார்க்கெட் கட்டடம் காலி செய்யப்பட்டு தனியார் இடத்தில் தற்காலிக மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. பயன்பாடு இல்லாத கட்டடத்தில் குடிமகன்கள் மது அருந்தும் கூடாரமாக இருந்தது. இதனால் அப்பகுதி கடந்து செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். தற்போது பழைய மீன்மார்க்கெட் கட்டடம் அகற்றும் பணி நடக்கிறது.கீழக்கரை மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கவுன்சிலர் சூரியகலா கூறியதாவது: சேதமடைந்த கட்டடத்தை அகற்ற கவுன்சில் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். தற்போது மீன்மார்க்கெட் அகற்றிய பிறகு அவ்விடத்தில் நகராட்சி நிர்வாகம் புதிய மீன் கடை கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என்றார்.