தெற்குவாணி வீதி கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ராமநாதபுரம்: ஆதிதிராவிடர் மக் களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றினர். ராமநாதபுரம் வாலாந்தரவை அடுத்த தெற்குவாணி வீதி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு 2.73 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த இடத்தை ஆக்கிரமித்து சிலர் குடிசை மற்றும் சுவர் எழுப்பியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வருவாய்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். அதன்பின்பும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் போலீசார் உதவியுடன் வருவாய்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர். இதற்கு அப்பகுதியில் வசிப்போர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, வீட்டை இடித்தால் தற்கொலை செய்வோம், மறியல் செய்வோம் என அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். உடனே அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். பின்பு 13 கட்டடங்கள், சுவர்கள் அகற்றப்பட்டன.