மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு பதிவேற்றம் செய்ய வேண்டுகோள்
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்ட பணிகளில் சுய கணக்கெடுப்பு மூலம் பதிவேற்றம் செய்து ஒத்துழைக்க வேண்டும் என்று தாசில்தார் ஆண்டி கூறினார். அவர் கூறியதாவது: திருவாடானை தாலுகாவில் முதல் கட்டப் பணிகளான வீடுகள் கணக்கெடுப்பிற்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் தொழில் நுட்ப வசதிகளுடன் எளிமையாக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது வீட்டிலிருந்தே இணையதளம் வாயிலாக சுய கணக்கெடுப்பு முறையில் தங்களின் விபரங்களை எளிதாக பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்களின் அலைபேசியில் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று சுய கணக்கெடுப்பில் பங்கேற்கலாம். இதில் வீட்டு விபரம், குடும்ப விபரம், வீட்டிலுள்ள வசதிகள் போன்ற தகவல்களை மக்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். எனவே திருவாடானை தாலுகா மக்கள் இந்த முதல் கட்ட கணக்கெடுப்பு பணியில் 100 சதவீதம் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.