மன்னார் வளைகுடா கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு: 25 ஆண்டுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டது
2004 சுனாமிக்கு பிறகு கடற்கரையோர கிராமங்களில் அதிகளவு கடல் நீர் புகுந்து கரைப்பகுதிகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் கடல் அலைகள் கரைப்பகுதியை நோக்கி வருவது தொடர்கிறது.அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது:மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதியை சுற்றி ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் கடற்கரையையொட்டி பல ஆயிரம் ஏக்கரில் தென்னந்தோப்புகள் உள்ளன. காற்றின் வேகம், பேரலைகளின் தாக்கம், மண் அரிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கரைப்பகுதி தற்போது படிப்படியாக அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் உட்புகுந்து வருகிறது.இதனால் கடற்கரை ஓரத்தில் வளர்ந்திருந்த பனை, தென்னை, சீமை கருவேல மரங்கள், பூவரசு மரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் கடல் நீரின் தாக்கத்தால் கடலுக்குள் சென்று விட்டன.பருவநிலை மாற்றத்தால் பெருவாரியான நிலப்பகுதி கடலுக்குள் செல்வது தொடர்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து கடற்கரையோரங்களில் பாதிப்புகளை சந்திக்கின்ற கிராமங்களை கண்டறிந்து தடுப்புச் சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரை ஓரத்தில் காற்று தடுப்பானாக விளங்கும் வகையில் சவுக்கு மற்றும் பனை மரங்களை அதிகளவில் நட்டு பராமரிக்க வேண்டும். இதற்கு வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் கூட்டு முயற்சி அவசியத் தேவையாக உள்ளது என்றனர்.