ஆள் நடமாட்டமில்லாத பகுதியை தேர்வு செய்யும் கடல் புறாக்கள்
வாலிநோக்கம்: வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரையோரம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அதிகளவு கடல் புறாக்கள் காலை முதல் மாலை வரை கூட்டமாக உலா வருகின்றன.மனிதர்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரைப் பகுதியை தேர்வு செய்யும் கடல் புறாக்கள் வாலிநோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான், நரிப்பையூர் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரங்களில் இரை தேடுவதற்காக உலா வருகின்றன.கடல் புறாக்கள் லேரிடா என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை புறாவைப் போன்ற உடல் அமைப்பை கொண்டது. மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிகளவு இரை தேடுவதற்காக வருகின்றன. சீசனுக்கு சீசன் புலம்பெயரும் தன்மை கொண்டது. பெரும்பாலும் இவை கரைப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. நிலப்பரப்புக்கு வராது.இவற்றை மீன் வாசனை பெரிதும் சுண்டியிழுக்க கூடியது. இவற்றின் அலகு சற்றே வளைந்திருக்கும். இதுபோக விசிறி போன்ற அழகிய வால் அமைப்பும், நீண்ட இறக்கை கொண்டிருக்கும். நீந்துவதற்கு ஏதுவாக கால்களில் விரல்களோடு ஜவ்வு இணைந்திருக்கும். ஏப்ரல் மாதம் வாக்கில் இவை கூட்டமாக கூடுகிறது. இவை இரண்டு முதல் மூன்று முட்டைகள் வரை இட்டு அவற்றை அடைகாத்து குஞ்சு பொரிக்க 24 நாட்கள் ஆகின்றன. அழகான கடல் புறாக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.தற்பொழுது விடுமுறை நாட்களில் கடற்கரை ஓரங்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வருகின்றனர். இவ்வகையான அரிய வகை பறவைகளை வேட்டையாடுவதை தடுப்பதற்காக வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.