இலங்கைக்கு கடத்த முயன்ற காலணி பொருட்கள் பறிமுதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள காலணி தயாரிப்பிற்கான மூலப்பொருட்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு மண்டபம் சீனியப்பா தர்கா கடற்கரையில் ராமேஸ்வரம் தனிப்பிரிவு எஸ்.ஐ., வடிவேல் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இரு டூவீலர், ஒரு காரில் கடத்தல்காரர்கள் வந்தனர். பின் காரில் இருந்து 3 பெரிய பார்சல்களை இறக்கினர். மறைந்திருந்த போலீசார் கடத்தல்காரர்களை பிடிக்க முயன்றனர். அப்போது பார்சல், இரு டூவீலர்களை அங்கே போட்டு விட்டு காரில் கடத்தல்காரர்கள் தப்பினர்.போலீசார் பார்சலை சோதனையிட்டதில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள, காலணி தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் இருந்தன. இதனை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தனர். மண்டபம் போலீசார் தப்பி ஓடிய மண்டபம் மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.