கலெக்டர் அலுவலக வளாகத்தில் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொட்டி நிரம்பி கழிவுநீர் குளம் போல தேங்கியதால் துர்நாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில் உள்ள புதிய கலெக்டர் அலுவலக கீழ்தளம், மேல்தளத்தில் கலெக்டர் அலுவலகம், டி.ஆர்.ஓ., கூடுதல் கலெக்டர், துணை கலெக்டர்கள், தேர்தல் பிரிவு, மக்கள் தொடர்பு மையம் என பல்வேறு துறை அலுவலகங்கள் தனித்தனியாக உள்ளன. தினமும் ஏராளமான வெளியூர் பணியாளர்கள், மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை பெயரளவில் உள்ளது. இதன் காரணமாக புதிய கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள தொட்டி நிரம்பி காலி இடத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.இதனால் நோய் தொற்று அபாயம் உள்ளதாக அலுவலர்கள், மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடன் கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.