ஐயப்பன் கோயில் அருகே கழிவுநீரால் சுகாதாரக்கேடு
பரமக்குடி : பரமக்குடி ஐந்து முனை ரோடு ஐயப்பன் கோயில் முன்பு வாறுகால் சீர் செய்யப்படாத நிலையில், கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்தால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.பரமக்குடியில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் ஐந்து முனை பகுதி அருகில் இளையான்குடி ரோட்டோரம் இருக்கிறது. இப்பகுதியில் ஓட்டப்பாலம் தொடங்கி ஆயிரக்கணக்கான வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வாறுகால் செல்கிறது. தொடர்ந்து வாறுகால் கட்டப்படாமல் மண் பகுதிகளிலேயே செல்கிறது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் மக்கள் கொசு தொல்லையால் தினமும் பாதிக்கின்றனர். இச்சூழலில் கோயில் முன்பு கழிவு நீரில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பை மற்றும் செடி, கொடிகளை அகற்றாமல் உள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் அபாயம் அதிகரித்துள்ளது.இதனால் கோயிலில் நிம்மதியை தேடி வரும் மக்கள் வருத்தம் அடையும் சூழலுடன் செல்கின்றனர். எனவே வாறுகாலை முறைப்படுத்துவதுடன், குப்பையை அகற்றி சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.