செய்யது அம்மாள் கல்லுாரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியின் முதுகலை ஆங்கிலத் துறை சார்பில், பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சேதுபதி அரசு கலைக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் மோகனமுருகன் பேசியதாவது: ஆசிரியர்கள் தான் சமூகத்தின் ஆகச் சிறந்த சிற்பிகள். அவர்களால் மட்டும் தான் நேர்மறையான உலகை உருவாக்க முடியும். இனிவரும் காலங்களில் ஆசிரியர் சமூகம் நிறைய இன்னல்களை சந்திக்க நேரிடும். அதிலிருந்து தங்களை அவர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார். செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் சரவணன், ஆசிரியர்கள் உடல்நலம், மனநலனை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விவரித்தார். கல்லுாரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் சானாஸ் பரூக் பங்கேற்றனர். ஆங்கிலத் துறை தலைவர் சத்தியவதி ஏற்பாடுகளை செய்தார்.