இலங்கை கடற்படையினரால் 8 மண்டபம் மீனவர்கள் கைது
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து டிச., 7ல் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், மீன்வளம் நிறைந்த இந்திய - இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து, மீனவர்களை விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து வைத்து கரை திரும்பினர். இதில், கார்த்திக், சகாய ஆண்ட்ரூஸ் ஆகியோரது இரு படகில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால், ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் இரு படகையும் மடக்கி பிடித்தனர்.படகில் இருந்த மீனவர்கள் பத்ரப்பன், 55, கண்ணன், 52, உள்ளிட்ட 8 பேரை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். பின், அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.