இலங்கை போலீஸ்காரர் வழக்கு ஜன.10க்கு தள்ளி வைப்பு
ராமநாதபுரம்,:போதைப்பொருள் திருடி தலைமறைவாகி தப்பி வந்து தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு விசாரணையை ராமநாதபுரம் நீதிமன்றம் 2025 ஜன.10க்கு தள்ளி வைத்தது. இலங்கை கொழும்பு புறநகர் சபுகஸ்கந்த பகுதி மரக்கடையில் இருந்து 2020 ஆக.26-ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கைதான மரக்கடை உரிமையாளர் தகவலில் அனுர குமார என்பவரை போலீசார் கைது செய்தனர்.இவர் இலங்கை துறைமுகம் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் 32, அண்ணன் ஆவார். பிரதீப் குமார் பண்டாரா தான் அந்த போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த போதைப்பொருளை திருடி தனது சகோதரரிடம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர். இதனால் பிரதீப் குமார் பண்டாராவை வழக்கில் சேர்த்து விசாரிக்க அந்நாட்டு போலீசார் முடிவு செய்தனர். இதையறிந்தவர் பைபர் படகில் தமிழகம் தப்பி வந்தார். 2020 செப்.4ல் மண்டபம் கடலோர போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. இதில் பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை போலீஸ்காரர் நேரில் ஆஜரானார். இந்த வழக்கை 2025 ஜன.,10க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.