பஸ் படிக்கட்டில் மாணவர் பயணம் தொடர்கிறது! விபத்திற்கு முன்னதாக நடவடிக்கை அவசியம்
ராமநாதபுரம் பகுதியில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள்இல்லாததால் உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிகட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி, கிராமங்களில்இருந்து கல்லுாரி, பள்ளிகளில் படிக்க பல ஆயிரம் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ் போக்குவரத்து வசதி இல்லை. இதன் காரணமாக பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் காலை, மாலை நேரங்களில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது. கடந்த காலங்களில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பல மாணவர்கள் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். இது தெரிந்தும் ராமநாதபுரத்தில் அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், பள்ளி, கல்லுாரி முடியும் நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும். படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை கண்டித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.