மேலக்கிடாரம் அரசு பள்ளியில் மரத்தடி நிழலில் கல்வி பயிலும் மாணவர்கள்
சாயல்குடி: சாயல்குடி அருகே மேலக்கிடாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடி நிழலில் பாடம் படிக்கின்றனர். இப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 9 ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளியில் கட்டடம் இல்லாததால் மரத்தடி நிழலில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நிலை உள்ளது. தற்போது மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் மாணவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலக்கிடாரத்தை சேர்ந்த தன்னார்வலர் பச்சைக் கண்ணு கூறியதாவது: மேலக்கிடாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று வகுப்புகளுக்கு மரத்தடி நிழலில் ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இதன் அருகே புதிய பள்ளி கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் நடக்கிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி தரமான கட்டுமான பணியை செய்வதற்கு கல்வித் துறை அதிகாரிகள் முன்னின்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மகளிர் விடுதி சுற்றுச்சூழல் இல்லாமல் திறந்த வெளியாக இருப்பதால் கால்நடைகள் விடுதி வளாகத்தில் சுற்றித் திரிகின்றன. இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே மாவட்ட கல்வித்துறையினர் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.