பரமக்குடி இருவழிச் சாலையில் பஸ் ஸ்டாப் இன்றி மாணவர்கள் தவிப்பு பூவிளத்துார் அருகே ஆபத்து
பரமக்குடி : பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் இருவழிச்சாலை பூவிளத்துார் பகுதியில் பஸ்ஸ்டாப் இன்றி பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் தினமும் ரோட்டோரம் காத்திருக்கின்றனர். பரமக்குடி கல்வி மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள் கிராமங்களில் செயல்படுகிறது. இதன்படி அங்கன்வாடி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என ஒவ்வொரு பகுதியிலும் உள்ளது. தொடர்ந்து பரமக்குடி, ராமநாதபுரம் இருவழிச்சாலையில் டவுன் பஸ்களில் பயணம் செய்து மாணவர்கள் அரசு பள்ளிகளுக்குச் செல்லும் நிலை உள்ளது.தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் அந்தந்த பள்ளிகள் மூலம் கட்டணப்பேருந்துகளை இயக்குகின்றனர். இந்நிலையில் பரமக்குடி அருகே மஞ்சூர் பகுதி பூவிளத்துார் அருகில் அரசு பள்ளி செயல்படுகிறது. இங்கு தினம் தினம் காலை, மாலை நேரங்களில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது ஆனால் இரு வழிச்சாலை ஓரத்தில் பஸ்ஸ்டாப் இல்லாத நிலையில் மாணவர்கள் நிற்பதற்கும் இடவசதி கிடையாது. இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்லும் சாலையில் ஆபத்தை அறியாமல் மாணவர்கள் கருவேலமர நிழலில் காத்திருக்கின்றனர் எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிற்கவும் இட வசதியை ஏற்படுத்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.