பரமக்குடி வணிக நிறுவனங்கள் பேக்கரிகளில் சப் கலெக்டர் ஆய்வு
பரமக்குடி: பரமக்குடியில் இயங்கும் வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் சப் கலெக்டர் தலைமையில் ஆய்வு நடந்தது. பரமக்குடியில் ஏராளமான உணவகங்கள், பேக்கரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவுப் பொருட்கள் மற்றும் கேக் உள்ளிட்டவற்றில் தரம் குறைவாக உள்ளதாக மக்களிடமிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சப் கலெக்டர் அபிலாஷா கவுர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தாசில்தார் வரதன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெண்ணிலா, டவுன் போலீஸ் எஸ்.ஐ., கணேசமூர்த்தி உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அப்போது கடை உரிமம், தீயணைப்பு சாதனம் போன்றவை முறையாக உள்ளதா என சரி பார்க்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து உணவுப் பொருட்கள் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுவதாகவும், குறைகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சப் கலெக்டர் தெரிவித்தார்.