பூட்டியே வைக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம் அமைச்சர் தொகுதியில் அவலம்
சிக்கல்: சிக்கல் அருகே கீழக்கிடாரம் ஊராட்சி காவாகுளத்தில் 2022ல் புதிதாக கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் இந்த அவல நிலை உள்ளது. காவாக்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட சுகாதார நிலையம் மூன்றாண்டுகளாக டாக்டர் மற்றும் நர்சுகள் இல்லாத நிலையில் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. காவாகுளத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: இந்த மருத்துவமனை 2022 ஆக.,19ல் அமைச்சர் சுப்பிரமணியத்தால் திறந்து வைக்கப்பட்டது. மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் செவிலியர் பணியிடம் இல்லாததால் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அத்தியாவசிய உடல் நல பிரச்சனைக்கு சிக்கல், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க காவாகுளத்தில் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.