உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இருப்பது 114... வசிப்பது 5 குடும்பங்கள் ராமநாதபுரம் அருகே காலியான கிராமம்

இருப்பது 114... வசிப்பது 5 குடும்பங்கள் ராமநாதபுரம் அருகே காலியான கிராமம்

உத்தரகோசமங்கை:ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் இருந்து 3 கி.மீ.,ல் உள்ள தெய்வச்சிலை நல்லுார் கிராமத்தில் உள்ள 114 வீடுகளில் 5 வீடுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். பழமையான மற்ற வீடுகள் காட்சிப்பொருளாகத்தான் உள்ளன. உத்தரகோசமங்கை அருகே வெள்ளா மரிச்சுக்கட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தெய்வச்சிலை நல்லுாரில் 114 வீடுகள் உள்ளன. அனைத்தும் 60 முதல் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள். குறுகலான தெரு, சீராக வீடுகள் என அழகுற அமைந்துள்ளன. ஆனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ராமநாதபுரம் நகர் பகுதிகளில் குடியேறியுள்ளனர். திருவிழா, சிவராத்திரி குலதெய்வ வழிபாட்டிற்கு மட்டும் கிராமத்திற்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தும், இடிந்தும், பராமரிப்பின்றி உள்ளன. இங்கு 1939ல் கட்டப்பட்ட விநாயகர் கோயிலில் தற்போது வரை எளிமையாக பூஜை நடந்து வருகிறது. கிராமத்தில் வசிக்கும் விவசாயி பூமிநாதன் 65 கூறியதாவது: டாக்டர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என பலதுறைகளிலும் இந்த கிராமத்தினர் உள்ளனர். வசதி வாய்ப்புகளுக்காக நகர் பகுதிக்கு சென்றுவிட்டனர். தற்போது இங்கு ஐந்து குடும்பத்தினர் மட்டுமே வசிக்கிறோம். கண்மாயை ஒட்டி உள்ள கிணற்றில் குடிநீர் எடுக்கிறோம். டேங்கரில் வரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. 15 பேர் மட்டுமே வசிப்பதால் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. வெறிச்சோடிய தெருக்கள் எங்களுக்கு பழகிவிட்டது. அத்தியாவசிய பொருட்களை உத்தரகோசமங்கைக்கு சென்று வாங்கி வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை