தனுஷ்கோடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான செல்பி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி படகு நிறுத்தும் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் நின்றபடி 'செல்பி' எடுக்கின்றனர். தனுஷ்கோடி அருகே முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் படகுகள் நிறுத்தும் பாலம் உள்ளது. ராட்சத அலைகள் எழுவதால் இங்கு படகுகள் நிறுத்த முடியாமல் போனது. இதனால் பாலம் கட்டிய நாள் முதல் தற்போது வரை பயன்பாடின்றி முடங்கியுள்ளது. இந்நிலையில் பாலத்தின் கடைசி முனையில் சுற்றுலாப் பயணிகள் நின்றபடி கடல் அலையை கண்டு ரசித்து செல்பி எடுத்தனர். அப்போது எழும் ராட்சத அலையில் சிக்கி கீழே விழுந்தும், அலைபேசிகள் சேதமடைந்தும் பாதிக்கப்பட்டனர். இதனை தடுக்க மரைன் போலீசார் பாலம் நுழைவில் முள்மரங்களை வெட்டி தடுப்பு வேலி அமைத்தனர். இதனை பொருட்படுத்தாத பயணிகள் முள்வேலியை தாண்டி பாலத்தில் ஆபத்தான முறையில் நின்றபடி செல்பி எடுக்கின்றனர். இதனால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.